நெல்லையில் “மோடி பொங்கல்” விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களை, இரவோடு இரவாக போலீசார் அகற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராதாபுரம் அருகேயுள்ள கண்ணன்குளம் பகுதியில் இன்று மோடி பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக நேற்று மாலை முதலே முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. மேலும், அப்பகுதி முழுவதும் பிரதமர் மோடி மற்றும் மாநில, மாவட்ட பாஜக நிர்வாகிகளின் உருவம் பொறித்த பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இதற்கிடையே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், எந்தவித முன்னறிவிப்புமின்றி பேனர்களை அகற்றி எடுத்துச் சென்றனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த பாஜக நிர்வாகி அசோக், போலீசாரை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
















