நடிகர் கார்த்தி நடித்துள்ள “வா வாத்தியார்” திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜூன் லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் ஸ்டூடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனம் பெற்ற கடனுக்கு வட்டியுடன் சேர்த்து 21 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை செலுத்த ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிடக் கோரி சொத்தாட்சியர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பணத்தை திரும்ப செலுத்தும் வரை “வா வாத்தியார்” திரைப்படத்தை வெளியிடக் கூடாதென தடை விதித்து உத்தரவிட்டது.
இதனிடையே, படத்தை வெளியிட அனுமதி கோரி ஞானவேல் ராஜா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஸ்டூடியோ கிரீன் தரப்பில், 3 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ஞானவேல் ராஜா, நீதிமன்றத்தில் செலுத்தினார்.
இதையடுத்து, மீதி தொகையையும் செலுத்தினால் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்து கொள்ளலாமென நீதிபதிகள் அனுமதியளித்து உத்தரவிட்டனர்.
இதனிடையே, மூன்று கோடி ரூபாய் கடன் தொகையை திருப்பித் தராததால் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி தனேஷ் அசோசியேட்ஸ் நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி, தடை விதிக்க மறுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.
இந்நிலையில், அனைத்து தடைகளும் விலகியதாக ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் புதிய போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது. அதில், ‘வா வாத்தியார்’ திரைப்படம் நாளை வெளியாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், திட்டமிட்டப்படி இப்படம் வெளியாக உள்ளது.
















