புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு வீரரை வெட்டி கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அழகாம்பாள்புரத்தை அடுத்த வேப்பங்குடி பகுதியைச் சேர்ந்தவர் இன்பரசன். ஜல்லிக்கட்டு வீரரான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கும், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே அழகாம்பாள்புரம் அரசு பள்ளி அருகே இன்பரசனை சுற்றி வளைத்த விக்னேஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இன்பரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், தப்பியோடியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, முள்ளூர் – புதுக்கோட்டை பிரிவு சாலையில் இன்பரசனின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, போலீசார் அவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கலைத்தனர்.
















