சென்னை தியாகராய நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில் பகவத் கீதையை மையமாக கொண்டு குழந்தைகள் அரங்கேற்றிய நாடகம் மற்றும் நடன நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்து கைத்தட்டல்களை அள்ளியது.
பகவத் கீதை என்பது வாழ்க்கையின் கடமைகள், தர்மம், கர்மா, பக்தி ஆகியவற்றை எளிய முறையில் விளக்கும் ஆன்மிக வழிகாட்டியாக விளங்குகிறது.
இந்த பகவத் கீதையை மையமாக கொண்டு குழந்தைகள் அரங்கேற்றிய நாடகம் மற்றும் நடன நிகழ்ச்சிதான் பார்வையாளர்களை கவர்ந்தது.
சென்னை தி நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில், சென்னையின் அனைத்து கிளைகளிலும் உள்ள பள்ளி மாணவர்களுக்குமான திட்டப் பணிகள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் பகவத் கீதையை மையமாக கொண்டு Pre KG முதல் LKG வரையிலான குழந்தைகள் பங்கேற்ற நாடகம்தான் ஹைலைட். பகவத் கீதையின் தத்துவத்தை உள்வாங்கி நடித்த மாணவர்கள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தனர்.
பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்த கலாசாரத்தை நினைவு கூறும் விதமாக நாடகம் அமைக்கப்பட்டிருந்தது. ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஸ்கூல் ப்ராஜெக்டுக்காக பகவத் கீதையை கேட்டுத் தெரிந்துக் கொள்வது போல, அதில் உள்ள பக்தி முறைகளை தத்ரூபமாக நிகழ்த்திக் காட்டிய விதம் திரையில் காணும் காட்சிகளை மிஞ்சியது.

4 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் சமஸ்கிருத துறை மாணவர்கள், பகவத் கீதையில் உள்ள முக்கிய நிகழ்வுகளையும், பகவத் கீதையின் 18 அத்தியாயங்களில் உள்ள முக்கிய விஷயங்களையும் காட்சிப்படுத்தினர். குறிப்பாக குருசேத்ரா போரின் போது என்ன நடந்தது, விஷ்ணுவின் அவதாரங்கள், ஆழ்வார்கள் யார், துரியோதனின் வாழ்க்கை நிலை, 10 வது அத்தியாயத்தில் உள்ள நிகழ்வுகளை காட்சிப்படுத்தியது மனதை கவர்ந்தது.
இந்தக் கால குழந்தைகளின் உணவு பழக்க வழக்கங்கள் பல முறைகளில் மாறி இருக்கும் வேளையில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவினை அதிகம் உட்கொள்வதும், பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை உட்கொள்வதும் உடலில் எதிர்வினை ஆற்றலை ஏற்படுத்துவதுடன், தீங்கு விளைவிக்கும் என்பதை விளக்கும் விதமாக சிறப்பு நாடகத்தை நடித்துக் காட்டிய விதம் அனைவரின் மத்தியிலும் வரவேற்பை பெற்றது.
இந்துக்கள் மட்டுமல்லாமல் அனைத்து மக்களுக்குமான பொதுவான வாழ்க்கைத் தத்துவத்தை கற்றுக் கொடுக்கும் பகவத் கீதையை, பள்ளியின் ப்ராஜக்ட்டாக எடுத்துக் கொண்ட மழலைகள், நாடகங்களும், கண்காட்சிகளும் நிகழ்த்திக் காட்டியது பாராட்டுகளை பெற்றது. பகவத் கீதை எல்லோருக்குமான ஒன்று என்பதை உணர்த்திய மழலைச் செல்வங்களை நாமும் மனதார பாராட்டலாம்.
















