அனைத்துப் பள்ளிகளிலும் மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் மாதவிடாய் சுகாதார கொள்கையை, நாட்டின் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் செயல்படுத்தக் கோரி, ஜெயா தாக்கூர் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாழ்வுரிமை என்பது மாதவிடாய் காலத்தில் உடலை சுகாதாரமாக பராமரிப்பதையும் உள்ளடக்கியது என உச்சநீதிமன்றம் கூறியது.
இதனை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மட்கும் சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்குவது கட்டாயம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மாணவிகளுக்கென தண்ணீர் வசதியுடன் கூடிய தனிக் கழிவறையை உறுதி செய்ய வேண்டும் எனக் கூறிய உச்சநீதிமன்றம், மாணவிகளுக்கு என தனி கழிவறை வசதிகள் செய்து தராதது கல்விபெறும் உரிமையை மீறும் செயலாகும் எனவும் கூறியுள்ளது. கல்வி நிறுவனங்கள் கல்வி உரிமைச் சட்டம் பிரிவு 19ன் படி மாணவிகளின் சுகாதார வசதிகளை உறுதி செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
















