தைப்பூசத் திருநாளையொட்டி சென்னை வடபழனி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நள்ளிரவு முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
சென்னை வடபழனி முருகன் கோயிலில் தைப்பூசத்தையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு முருகப்பெருமானுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
இதனை தொடர்ந்து, ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமானை நள்ளிரவு முதல் காத்திருந்த பக்தர்கள் 7 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 48 நாட்கள் விரதம் இருந்து பால்குடம் மற்றும் காவடி ஏந்தியும், அலகுகுத்தியும் வந்த பக்தர்கள் தனி வரிசையில் சென்று நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
வடபழனி முருகன் கோயிலில் இதுவரை இல்லாத அளவிற்கு பக்தர்கள் குவிந்ததால், 100 அடி சாலை முழுவதும் கூட்டம் அலைமோதியது. மேலும், போக்குவரத்து நெரிசல் மற்றும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
















