திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக, அவதூறு கருத்துகளை பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், கடந்த கார்த்திகை தீபத்தன்று விளக்கு ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.
இதனால், ஆவேசமடைந்த இண்டி கூட்டணி, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மத ரீதியாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டி அவரை பதவி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நோட்டீஸ் அளித்தது.
இந்தச் சூழலில், நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக, ஜாதி மற்றும் மத ரீதியில் அவதுாறு கருத்துகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பாக தமிழக டிஜிபி சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், சைபர் குற்றப் பிரிவு , சமூக ஊடகங்களில் உள்ள ஆட்சேபனை கருத்துகள், பதிவுகளை தேடி சரிபார்த்து நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவதுாறு பரப்பும் வகையிலான புத்தகங்களோ, சுவரொட்டிகளோ, அறிக்கைகளோ வெளியிடக் கூடாது என்றும், அதை உறுதி செய்யுமாறு மாவட்ட எஸ்பி-க்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
















