கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் நடைபெற்ற மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி பூஜையில், உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
கன்னியாகுமரியில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் கடல் அன்னைக்கு ஆரத்தி எடுப்பது வழக்கமான ஒன்று. அதன்படி, தை மாத பௌர்ணமியான நேற்று, கடற்கரையில் அமைந்துள்ள பரசுராமர் விநாயகர் கோயில் முன்பாக பக்தர்கள் திரண்டு வழிபாடுகளைத் தொடங்கினர். பின்னர், முக்கடல் சங்கமிக்கும் பகுதிக்குச் சென்று, கடல் அன்னைக்கு பால் மற்றும் புனித நீரை ஊற்றி சமுத்திர அபிஷேகம் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து கயிலை வாத்தியங்கள் முழங்க கடல் அலைகளுக்கு மகா சமுத்திர ஆரத்தி காட்டப்பட்டது. இந்தச் சிறப்பு வழிபாட்டில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தனது குடும்பத்துடன் பங்கேற்று வழிபாடு நடத்தினார். தொடர்ந்து பகவதி அம்மன் கோயிலுக்குச் சென்றும் சாமி தரிசனம் செய்தார்.
















