ராஜராஜ சோழனுக்கு 125 அடி சிலை அமைப்பது தொடர்பான அறிவிப்பு ஏடளவில் மட்டும் இல்லாமல், அதற்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என தஞ்சை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என கடந்த 2023ம் ஆண்டு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அங்கு ராஜராஜ சோழனுக்கு 125 அடி உயரத்தில் சிலை அமைக்கவும் தமிழக அரசு முடிவு செய்தது. பின்னர், அதற்கான இடத்தை தேர்வு செய்வதில் காலம் தாழ்ந்த நிலையில், இறுதியில் தமிழ் பல்கலைக்கழக வளாகத்தில் 52 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.
இதற்காக 56.41 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த அருங்காட்சியகத்திற்கு வரும் 13ம் தேதி அடிக்கல் நாட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
இத்தகைய சூழலில், 2023 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சோழர் அருங்காட்சியகத்திற்கு, இப்போதுதான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கும் பொதுமக்கள், இனியும் காலதாமதம் செய்யாமல் பணிகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
















