பாகிஸ்தான், சீனா அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் விதமாக, பாதுகாப்புத்துறைக்கு கடந்த நிதியாண்டைவிட 15 சதவிகிதம் கூடுதலாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இதுவரை இல்லாத அளவாக பாதுகாப்புத்துறைக்கு ஏழு லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார்.
பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு 2021-22ம் ஆண்டில் 4.48 லட்சம் கோடியாக இருந்த நிலையில்,2022-23ம் ஆண்டில் 5.25 லட்சம் கோடியாக அதிகரித்தது…
2023-24ம் ஆண்டில் 5.94 லட்சம் கோடியாகவும், 2024-25ம் ஆண்டில் 6.20 லட்சம் கோடியாகவும் இருந்தது…
2025-26ம் ஆண்டில் 6.81 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2026-27ம் ஆண்டுக்கான தற்போதைய பட்ஜெட்டில் 7.85 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 15 சதவிகிதம் கூடுதலாகும்…(NEXT)
ரஃபேல் போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளிட்டவற்றிற்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ராணுவ தளவாடங்களை நவீனப்படுத்த 2 லட்சத்து 19 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 21.84 சதவிகிதம் அதிகம் என்பது தெரியவந்துள்ளது.
இதேபோன்று ராணுவ பராமரிப்பு மற்றும் செயல்பாடுகள் உள்ளிட்ட அன்றாட செலவினங்களுக்கு மூன்று லட்சத்து 65 ஆயிரத்து 478 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ராணுவ ஓய்வூதிய திட்டங்களுக்கு ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 338 கோடியும் நிதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்புத்துறையில் இறக்குமதி செய்யப்படும் போர் விமான உதிரிபாகங்களுக்கு அடிப்படை சுங்கவரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத்துறையில் தற்சார்பு நிலையை எட்டவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், பட்ஜெட் உந்துதலாக இருக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
பாதுகாப்பு மூலதனச் செலவினம் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 1.80 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது, 28 சதவிகிதம் அதிகரித்து 2.31 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நவீனரக ஆயுத அமைப்புகளை கொள்முதல் செய்வதிலும், உள்நாட்டில் ராணுவ தளவாட உற்பத்தியை ஊக்குவிப்பதிலும் மத்திய அரசு மிகுந்த கவனம் செலுத்துவதை மூலதன செலவானது பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.
இந்த ஆண்டுக்கான பாதுகாப்பு பட்ஜெட் மேக் இன் இந்தியா மற்றும் ஆத்ம நிர்மர் பாரத் அல்லது ராணுவ தளவாட உற்பத்தியில் தன்னிறைவு ஆகியவற்றில் மத்திய அரசு அளிக்கும் முன்னுரிமையையும், முக்கியத்துவத்தையும் பிரபலிக்கிறது…
உண்மையில், பாதுகாப்பு உற்பத்தி சாதனை அளவைத் தொட்டு வருவதால், மிகப்பெரிய பாதுகாப்பு மூலதனச் செலவு ஏற்படுகிறது.
2024-25 நிதியாண்டில், ராணுவ தளவாட உற்பத்தி 1.54 லட்சம் கோடியைத் தொட்டது.
2023-24 நிதியாண்டில் உள்நாட்டு உற்பத்தி 1.27 லட்சம் கோடியாக உயர்ந்தது.
2014-15 ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தபோது வெறும் 46 ஆயிரத்து 429 கோடியாக இருந்த நிலையில், தற்போது ராணுவ தளவாட உற்பத்தி 174 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்திருப்பதை இது காட்டுகிறது..
2024-25 நிதியாண்டில் ராணுவ தளவாட ஏற்றுமதி 23 ஆயிரத்து 600 கோடியாக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் காட்டுகின்றன.
பிரான்ஸ் மற்றும் ஆர்மீனியா போன்ற நாடுகளுக்கான பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை, ஆகாஷ் எஸ்ஏஎம் அமைப்பு மற்றும் பினாகா மல்டி-பேரல் ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவை முக்கிய ஏற்றுமதிகளில் அடங்கும்…
கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் உயர்ந்த வண்ணம் உள்ளது..
எனினும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு பங்காக பாதுகாப்பு செலவினம், பல ஆண்டுகளாக குறைந்தே வந்துள்ளது.
குறிப்பாக 2025-26ம் ஆண்டில் பாதுகாப்புத்துறைக்கு 6.81 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1.9 சதவிகிதமாகவே இருந்தது.
















