மதுரையில் டாஸ்மாக் கடையின் பாரில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், மதுக்கடையை அகற்ற கோரிய பெண்களை காவல்துறையினர் முன்பு பார் கட்டட உரிமையாளர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த பாலா என்பவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மதுரை மாநகர் முல்லைநகர் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி வசித்து வந்துள்ளார்.
மதுப் பழக்கத்திற்கு அடிமையான பாலா, பி.பி.குளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் ஓட்டை உடைத்து குதித்துள்ளார்.
பாரில் மது அருந்திய பாலா, அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
காலை மதுக்கடையை திறந்தபோது பாலா சடலமாக தூக்கில் தொங்கி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, டாஸ்மாக் கடையால் கடும் மன உளைச்சலை சந்திப்பதாகவும், மதுபோதையில் வருபவர்கள் வீட்டின் முன்பு ரகளையில் ஈடுபடுவதாகவும் கூறி பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது, பார் கட்டட உரிமையாளர் காவல்துறையினர் முன்பேபெண்களுக்கு மிரட்டல் விடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
















