மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டு வழக்கில் கைதான இரு தற்காலிக ஊழியர்களின் ஜாமின் மனுக்களை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மதுரை மாநகராட்சியில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை, 150-க்கும் மேற்பட்ட கட்டடங்களின் வரி விதிகளை மீறி குறைக்கப்பட்டதாகவும், அதனால் அரசுக்கு பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தற்காலிக ஊழியர்களான பழனிகுமார் மற்றும் ஜெயபிரியா ஆகியோர் ஜாமின் கோரி மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது இருவருக்கும் ஜாமின் வழங்க அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் ஜாமின் வழங்க முடியாது எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்தார்.
















