இந்தியா மீதான வரி 18 சதவீதமாக குறைத்து உத்தரவிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தமும் இறுதி செய்யப் பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார். முதலில் வரி விதித்த ட்ரம்ப் இறங்கிவந்து இந்தியா மீதான வரி குறைத்திருப்பதும் நிறுத்தி வைத்திருந்த வர்த்தக ஒப்பந்தந்தை இறுதி செய்திருப்பதும் உலகையே ஆச்சரியப் பட வைத்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவின் 47 வது அதிபராக பதவியேற்ற உடனேயே சீனா, கனடா மற்றும் மெச்சிகோ உள்ளிட்ட அனைத்து நாடுகள் மீதும் வர்த்தக போரைத் தொடங்கினார் டிரம்ப்… பரஸ்பர வரி விதிக்கும் கொள்கையை முன் வைத்து அனைத்து நாடுகளையும் அதிபர் ட்ரம்ப் வர்த்தக பேச்சுவார்த்தைக்குக் கட்டாயப் படுத்தினார். இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் பூர்வாங்க வேலைகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டன.
பிரதமர் மோடி அமெரிக்காவுக்குச் சென்று அதிபர் ட்ரம்பைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருவரும் கடந்த டிசம்பருக்குள் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய இருநாட்டு தலைவரும் ஒப்புக்கொண்டனர்.
மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள், இருதரப்பு வர்த்தகத்தை, 500 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கவும் இலக்கும் நிர்ணயிக்கப்பட்டது.
அமெரிக்காவில் இருந்து எண்ணெய் கொள்முதலை இந்தியா அதிகரிக்கும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்திருந்தார். இதனையடுத்து, கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இரு நாட்டு வர்த்தக அமைச்சர்களும் அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்தியாவின் அதிக வரிகள் மற்றும் பால் உள்ளிட்ட வேளாண் பொருட்கள் குறித்து அதிருப்தி அடைந்த அமெரிக்கா, வர்த்தக பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போட்டது.
கடந்த ஏப்ரல் இரண்டாம் தேதி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “விடுதலை நாள்” வரித் திட்டத்தை வெளியிட்டார். அதில் அமெரிக்காவுக்கு இறக்குமதி ஆகும் இந்தியப் பொருட்களுக்கு 26 சதவீத வரி விதித்தார். வர்த்தக உடன்பாடு எட்டுவதற்காக, இந்த வரிவிதிப்பு 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அறிவித்தார். அதே ஏப்ரல் 16 ஆம் தேதி, இந்தியாவுக்கு வந்த அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பிரதமர் மோடியைச் சந்தித்து பேசினார். இருநாடுகளும் முறையான பேச்சுவார்த்தைகளுக்கான விதிமுறைகளை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் தொடங்கப் படும் என்று எதிர்பார்க்கப் பட்டது.
அடுத்த இரண்டு மாதங்களில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்த நிலையிலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. கடந்த ஜூலை 31 ஆம் தேதி, இந்தியா மீது 25 சதவீத வரி விதித்த அதிபர் ட்ரம்ப், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தாவிட்டால் மேலும் வரி விதிக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார். இதனையடுத்து இரு நாட்டு வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டன. ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி,கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியா மீது கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்தார் அதிபர் ட்ரம்ப். மொத்தமாக உலக நாடுகளிலேயே அதிகமாக 50 சதவீதம் வரி இந்தியா மீது விதிக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே இருதரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கப்பட்டன. ஜனவரி மாதத்தில் இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக நியமிக்கப் பட்ட செர்ஜியோ கோர், வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை நெருங்கி வருவதாக தெரிவித்திருந்தார்.
ஆச்சரியப் படும் வகையில், கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி, இந்தியப் பொருட்களின் மீதான பரஸ்பர இறக்குமதி வரியை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அமெரிக்கா குறைத்துள்ளது. அதிபர் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி இடையே நடந்த தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு இந்த வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். மேலும் இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார்..
Make in India திட்டத்துக்குப் மிகப்பெரிய வலிமையை இந்த வர்த்தக ஒப்பந்தம் தரும் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, உலகின் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகள் இணைந்து செயல்படுவது உலகத்துக்கே நன்மையளிக்கும் என்று தெரிவித்துள்ளார். சாத்தியமே இல்லை என்று பலரால் கூறப்பட்ட நிலையில் இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தைத் தனது வைராக்கியதால் சாத்தியமாக்கி உள்ளார் பிரதமர் மோடி என்று புவிசார் அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
















