மடப்புரம் காவலாளி அஜித் குமாரின் மரண வழக்கில், ஒன்றுமே இல்லாத விசயத்திற்கு ஒருவரை அடித்து கொலை செய்து விட்டதாக, உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சிறையில் உள்ள காவலர்கள் ஜாமின் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீமதி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அஜித் குமாரின் மரணம், காவல் மரணம் என்பது உறுதியாகி உள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஒன்றுமே இல்லாத விசயத்திற்கு ஒருவரை அடித்து கொலை செய்து விட்டதாகவும், புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
முன்விரோதம் எதுவும் இல்லை என்றும், டிஎஸ்பி விசாரிக்குமாறு கூறியதால் இவ்வாறு நிகழ்ந்துள்ளது எனவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஒன்றுமில்லா விசயத்திற்கு ஒருவரை இப்படி அடித்திருக்கிறீர்கள் என்று கூறிய நீதிபதி, காவல் துறையினருக்கு பாடம் புகட்டுவோம் என குறிப்பிட்டு வழக்கை பிப்ரவரி 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
















