தஞ்சாவூர் அருகே துணை முதல்வர் பங்கேற்கும் திருமண நிகழ்ச்சிக்காக சாலையோரம் கட்சி கொடிகளை ஊன்றும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி – திருவையாறு பைபாஸ் பகுதியில் தனியார் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இங்கு திமுக நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சி நடக்கிறது. இந்த திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.
இதற்காக திருமண மண்டபத்தின் அருகில் சாலையோரம் இரும்பு குழாயில் திமுக கொடிகளை ஊன்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேலம் பகுதியை சேர்ந்த கார்த்திக், கோகுல் ஆகிய இளைஞர்கள் மேலே சென்ற மின்சார கம்பியை கவனிக்காமல் இரும்பு குழாய் ஊன்றும் பொழுது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
















