நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் படுகொலைக்கு நீதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் மறுபுறம் எம்.எல்.ஏ. ஃபோட்டோ ஷூட் நடத்தியது கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் ஜோதி முருகன் என்பவர் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரியும், கள்ளச்சந்தை மது விற்பனையைத் தடுக்கத் தவறிய காவல்துறையைக் கண்டித்தும் உயிரிழந்தவரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் முக்கியச் சாலைகளில் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. இந்த பதற்றத்திற்கு மத்தியில் சங்கரன்கோவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா, சங்கர நாராயணன் கோவில் முன்பு தனது தொகுதி வளர்ச்சிப் பணிகள் குறித்த வீடியோ மற்றும் புகைப்படப் பதிவுகளை மேற்கொண்டார்.
அவ்வழியே பள்ளிக்குச் சென்ற சிறுவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து, தொகுதியின் வளர்ச்சி குறித்து கேமராவிற்கு முன்னால் பேசச் சொல்லி நிர்பந்தித்ததாகப் புகார் எழுந்துள்ளது.
ஒருபுறம் கொலை சம்பவத்தால் ஊரே பதற்றத்தில் இருக்கும்போது, அதனை கட்டுப்படுத்த வேண்டிய மக்கள் பிரதிநிதி, அதைப் பற்றிக் கவலைப்படாமல் தனது விளம்பரப் பணிகளில் கவனம் செலுத்துவது சமூக வலைத்தளங்களிலும், உள்ளூர் மக்களிடையேயும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
















