மதுரையில் பிப்ரவரி 28ம் தேதி நடைபெறும் என்டிஏ பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தரும் பிரதமர் மோடி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் சுவாமி தரிசனம் செய்வார் என, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மதுரை மண்டேலா நகரில் பிப்ரவரி 28ஆம் தேதி என்டிஏ சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. விழா நடைபெறும் இடத்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த தேர்தலின்போது திமுக அறிவித்த 525 தேர்தல் வாக்குறுதிகளில் 70 வாக்குறுதிகள் கூட நிறைவேற்றப்படவில்லை எனக் கூறினார்.
திமுக- காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளதென்றால் ராகுல் காந்தியை கனிமொழி ஏன் சந்திக்க வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
தவெகவுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் எவ்வளவோ முயன்றதாகவும், ஆனால் அது முடியாமல் போய்விட்டதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
















