சென்னையில் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பார்வை மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி அருகே பார்வை மாற்றுத்திறன் கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளின் ஊக்கத் தொகையை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், பட்டப்படிப்பு முடித்த அனைத்து பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நந்தனம் கல்லூரி அருகே 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த போலீசார், மாற்றுத்திறனாளிகளை களைந்து போகும்படி அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட பார்வை மாற்றுத்திறன் கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
















