ராஜஸ்தானில் நகைகளை கொள்ளையடிக்க 90 வயது மூதாட்டியை திருடர்கள் கட்டிலோடு தூக்கிச்சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
ராஜஸ்தானின் பண்டி மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர், வீட்டின் முன்பு காற்று வாங்கியபடி ஆழ்ந்து உறங்கியுள்ளார். அப்போது, அவர் அதிகளவில் நகைகளை அணிந்திருந்தார். நள்ளிரவு நேரத்தில் அவரது வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள், பணம் நகை ஏதாவது கிடைக்கிறதா என அனைத்து இடங்களிலும் தேடி பார்த்தனர். ஆனால், எதுவும் கிடைக்கவில்லை.
அப்போதுதான், மூதாட்டி அணிந்திருந்த நகைகள் அவர்களின் கண்ணில் பட்டது. ஆனால், அவர் அணிந்திருந்தது தங்க நகைகள் அல்ல; அனைத்தும் வெள்ளி நகைகள். இருப்பினும், வந்தவரை லாபம் என முடிவெடித்த கொள்ளையர்கள் அவற்றை பறித்து செல்ல முடிவெடுத்தனர்.
நகைகளை கழற்றும்போது மூதாட்டி எழுந்து சத்தம் போட்டுவிட்டால் மாட்டிக்கொள்வோம் என அஞ்சிய அவர்கள், மூதாட்டியை கட்டிலோடு கடத்தி சென்றனர். பின்னர், ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து, மூதாட்டியின் நகைகளை பறித்துவிட்டு அவர்கள் தப்பிச்சென்றனர்.
மறுநாள் அந்த வழியாக சென்ற சிலர், கட்டிலில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்ட மக்கள், போலீசாருக்கும் தகவல் அளித்தனர். இந்த சம்பவம் குறித்து பண்டி மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















