இந்தியாவில் வாழும் அனைவரும் கலாசார ரீதியாக இந்துக்கள்தான் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்டார். அப்போது உரையாற்றிய அவர், ஆர்எஸ்எஸ் வேறு எந்த அமைப்புடனும் போட்டியிட்டு உருவாகவில்லை எனவும் பிற அமைப்புகளை எதிர்க்கும் நோக்கில் தோன்றவில்லை எனவும் தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் யாருக்கும் எதிரானது அல்ல எனவும் புகழ் மற்றும் அதிகாரத்தை தேடுவதில்லை எனவும் விளக்கம் அளித்தார்.
இந்தியாவில் வாழும் இந்துக்கள், முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்கள் உட்பட அனைவரும் ஒரே மூதாதையரின் வாரிசுகள்தான் எனக் கூறிய மோகன் பாகவத், அவர்களின் வேர்கள் இந்த மண்ணில்தான் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும், அனைவரும் கலாசார ரீதியாக இந்துக்கள்தான் எனவும் குறிப்பிட்டார்.
இந்து- முஸ்லிம் ஒற்றுமை என்பது தவறான சொற்பதம் எனவும் பிரிந்திருக்கும் இரண்டு பேரைத்தான் ஒன்று சேர்க்க வேண்டும்; ஆனால் தாங்கள் அனைவரும் ஏற்கனவே ஒன்றுதான் எனவும் மோகன் பாகவத் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
















