அனைத்துக் கட்சிகளும் கூடுதல் தொகுதிகளை கேட்கும் நிலையில், தொகுதி பங்கீடு குழு அமைக்காமல் திமுக மவுனம் காப்பது கூட்டணிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டி உருவாகி உள்ளது.
திமுக, அதிமுக கட்சிகள் தங்கள் கூட்டணியில் பிற கட்சிகளை சேர்க்க காய் நகர்த்தி வரும் நிலையில், திமுக கூட்டணிக்குள் கடந்த சில நாட்களாக பனிப்போர் நீடித்து வருகிறது.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் தொகுதி என காங்கிரஸ் வலியுறுத்தி வரும் நிலையில், மற்ற கட்சிகளும் நெருக்கடி கொடுத்து வருகின்றன.
சாதி அடிப்படையில் பட்டியலினத்தவர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை பாமக பரப்புவதாகவும், பாமக இடம் பெறும் கூட்டணியில் இடம்பெற மாட்டோம் என்ற முடிவை எடுக்கும் சுதந்திரமும், அதிகாரமும், விசிகவுக்கு உள்ளதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விசிகவுக்கு எதிரான முடிவை எடுத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இதேபோன்று, சட்டமன்ற தேர்தலில் மமகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் அக்கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கூட்டணியில் இடம் பெற்றுள்ள, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் கூடுதல் தொகுதிகளை கேட்பது திமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
















