உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கக் கோரி சென்னையில் 13வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர்களை போலீசார் கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் 12 ஆயிரத்து 238 ஊராட்சி செயலாளர்களை உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கக் கோரி சென்னையில் கிராம ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் 13வது நாளாக போராட்டம் நடைபெற்றது.
கடந்த 6ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை 8 நாட்கள் நடந்த முதல்கட்ட போராட்டத்தின்போது அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர்.
இதனை தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அறிவிக்கப்பட்ட காலக்கெடுவை கடந்தும் அரசாணை வெளியிடப்படாததால் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 500க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் 13வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பிய ஊராட்சி செயலாளர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்கவைத்தனர்.
















