அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம், வெளியிட்டுள்ள இந்திய வரைபடத்தில் தெளிவாக ஆக்ரமிப்பு காஷ்மீரை இந்தியாவின் ஒரு பகுதியாகக் காட்டப் பட்டுள்ளது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுக்கே சொந்தம் என்பதை அமெரிக்கா ஏற்றுக்கொண்டு உறுதிபடுத்தியுள்ளது.
1947ம் ஆண்டு பிரிவினையைத் தொடர்ந்து, இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் அம்மாநிலத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து கொண்டது. பாகிஸ்தான் நேரடி அதிகாரத்தின் கீழுள்ள அந்தப் பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
இந்திய சுதந்திரத்தின் போது மன்னராட்சி இருந்த சுமார் 560 மாகாணங்களும் இந்தியாவுடன் இணைந்தன. பிரச்சனை காரணமாக ஜம்மு காஷ்மீருக்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க அனுமதிக்கும் 370வது சட்டப் பிரிவு கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் ஜம்மு-காஷ்மீருக்கு தனி அரசியல் சட்டமும் அதிகாரமும் அமல்படுத்தப்பட்டது.
2019ம் ஆண்டு பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டது. அதன்படி, மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர் ஆகஸ்ட் 5ம் தேதியன்று ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. அதே ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி முதல் இவை அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தன.
பிறகு அதே ஆண்டு நவம்பர் மூன்றாம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம், 28 மாநிலங்கள், 9 யூனியன் பிரதேசங்கள் உள்ளடக்கிய புதிய இந்திய வரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
இந்தப் புதிய இந்திய வரைபடத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும், இந்தியாவில் சீனா உரிமை கொண்டாடும் சில எல்லைப் பகுதிகளும் இடம் பெற்றுள்ளன.
கடந்த காலங்களில் காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்காவும் பல இஸ்லாமிய நாடுகளும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே செயல்பட்டன.
இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து,காஷ்மீர் குறித்த உலக நாடுகளின் பார்வை மாறத் தொடங்கியுள்ளது.
எடுத்துக்காட்டாக 2023ம் ஆண்டு செப்டம்பரில் இந்தியா தலைமையேற்று நடத்திய ஜி 20 உச்சிமாநாட்டின் போது ஜி20 நாடுகளின் சுற்றுலா துறை பிரதிநிதிகள் பங்கேற்ற மாநாடு காஷ்மீரில் நடைபெற்றது.
அப்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிலப்பரப்பையும் சேர்த்து புதிய இந்திய வரைபடத்தை ஐக்கிய அரபு அமீரக துணை பிரதமர் சயீப் பின் ஜாயத் அல் நயான் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் முழு காஷ்மீரும் இந்தியாவின் ஒரு பகுதியாக காட்டப்பட்டிருந்தது.மேலும் அந்தப் புதிய இந்திய வரைபடத்தில், சீனா உரிமை கொண்டாடும் அக்சய் சின் பகுதியும் இந்தியாவின் நிலப்பரப்பாக காட்டப்பட்டிருந்தது.
தொடர்ந்து 2024ம் ஆண்டு, ஜம்மு காஷ்மீரை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக காட்டும் இந்திய வரைபடம் இஸ்ரேலின் அரசு இணையதளத்தில் வெளியானது. வெளியான உடனேயே அந்த வரைபடத்தை நீக்கிய இஸ்ரேல் அரசு, அது எடிட்டரின் தவறு என்று விளக்கமளித்து இந்தியாவிடம் மன்னிப்பும் கேட்டது.
இந்நிலையில், இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கும் சூழலில் அமெரிக்க ஏற்றுமதிகளுக்கான இந்தியாவின் வரி குறைப்பைச் சுட்டிக் காட்டும் வகையில் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்தால் இந்திய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உட்பட முழு ஜம்மு காஷ்மீர் நிலப்பரப்பும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக தெளிவாக காட்டப்பட்டுள்ளது.
உலக வல்லரசாக விளங்கும் அமெரிக்கா, காஷ்மீரின் வரலாற்று உண்மையை ஏற்றுக் கொண்டுள்ளது என்பதையே இந்த புதிய வரைபடத்தை வெளியிட்டதன் மூலம் அமெரிக்கா வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு முழுவதும் அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் நெருக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்துவரும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் தன்னை ஒரு ஃபீல்ட் மார்ஷல் என்று மார்தட்டிக் கொள்ளும் அந்நாட்டு தலைமை ராணுவத் தளபதி அசிம் முனீர் பலமுறை அமெரிக்காவுக்குச் சென்றதெல்லாம் ஒரே நொடியில் வீணாகியுள்ளது.
பல ஆண்டுகளாக பாகிஸ்தான் கூறிவந்த பொய்களை அமெரிக்க ஏற்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
இது சர்வதேச அளவில் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய தோல்வியாகும் என்று புவிசார் அரசியல் வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
சர்வதேச அளவில் தனித்து விடப்பட்ட பாகிஸ்தானுக்கு இது பெரிய ராஜதந்திர தோல்வியாகவே பார்க்கப்படுகிறது.
















