காலி மதுபாட்டிலை திரும்ப பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடையை அடைத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தால் கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாக ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் திட்டத்தை கைவிட வேண்டும், பணி நேரத்தை 8 மணி நேரமாக நிர்ணயிக்க வேண்டும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை டாஸ்மாக் கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
ராமநாதபுரத்தில் உள்ள கடைகளை அடைத்த ஊழியர்கள், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்…
இதேபோல் புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடைகளை அடைத்து வைத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் 3 மணி நேரமாக மதுபானம் வாங்க முடியாமல் மதுபிரியர்கள் கடும் அவதி அடைந்தனர்.’
கும்பகோணத்தில் டாஸ்மாக் கடை அடைக்கப்பட்டதால் தனியார் மதுபான கடையில் கூட்டம் அலைமோதியது. மது பிரியர்கள் வாகனங்களை சாலையிலேயே நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.
















