சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம், அசாம், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த 5 மாநில தலைமைச் செயலர்கள் மற்றும் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
அதன்படி, சொந்த மாவட்டங்களில் பணிபுரியும் அரசு அதிகாரிகளையும், 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் அதிகாரிகளையும் இடமாற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய அதிகாரிகளை நியமிக்கும்போது அவர்களின் கடந்த கால தேர்தல் பணி அனுபவங்களை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில அதிகாரிகள் அரசியல் சார்புடன் செயல்படுவதை தவிர்க்கவும், வாக்காளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
















