இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திய உடனேயே, அமெரிக்கா வங்கதேசத்துடனும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த ஏப்ரல் மாதம் வங்க தேசத்துக்கு 37 சதவீத வரியை விதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் அதை 20 சதவீதமாகக் குறைத்து உத்தரவிட்டிருந்தார்.
கடந்த ஜனவரி மாதம் ஐரோப்பிய யூனியனுடன் வரலாற்று சிறப்பு மிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. இதனையடுத்து இந்தியா மீதான 50 சதவீத வரியை 18 சதவீதமாக குறைத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தார். பிறகு இருநாடுகளுக்கும் இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில் ஒன்பது மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு வங்கதேசத்துக்கான வரியை ஒரு சதவீதம் மட்டுமே குறைத்துள்ள அமெரிக்கா அந்நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அமெரிக்காவின் வேளாண் மற்றும் தொழில் துறை பொருட்களுக்கு வங்கதேசம் தனது சந்தையைத் திறந்து விட்டுள்ளது.
சோயா, பால் பொருட்கள், மாட்டிறைச்சி, கோழி, மரக் கொட்டைகள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட விவசாயப் பொருட்களும், மருத்துவ சாதனங்கள் ரசாயனங்கள், வாகனங்கள் மற்றும் ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் உள்ளிட்ட அமெரிக்க தொழில்துறை பொருட்களுக்கும் வங்கதேசம் நிபந்தனையற்ற அனுமதி வழங்கியுள்ளது.
அரசின் விமானம் தாங்கி போர்க்கப்பலான பிமான், 14 போயிங் விமானங்களைக் கொள்முதல் செய்யவும் வங்கதேச அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக சான்றிதழ்களை அங்கீகரித்துள்ள வங்கதேசம், மறுஉற்பத்தி செய்யப்பட்ட அமெரிக்கப் பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளையும் நீக்கியுள்ளது.
மேலும், வாகன புகை உமிழ்வு மற்றும் பாதுகாப்பு விதிகளில் அமெரிக்கத் தரநிலைகளையும் வங்கதேசம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்த்தின் ஒரே நல்ல விஷயம், சில ஜவுளி மற்றும் ஆடைகளுக்கான வரி விலக்குகளை அமெரிக்கா வழங்கியுள்ளது.
அதாவது, அமெரிக்காவின் பருத்தி மற்றும் செயற்கை இழை கொண்டு உற்பத்தி செய்யப்படும் வங்க தேச ஜவுளி மற்றும் ஆடைகளுக்கு மட்டும் அமெரிக்கா வரி விலக்கு அளித்துள்ளது.
சுமார் நான்கு மில்லியன் ஜவுளித் துறை தொழிலாளர்களைக் கொண்டுள்ள வங்கதேசம் உலகின் இரண்டாவது பெரிய ஆடை உற்பத்தியாளராக உள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜவுளித்துறையின் பங்கு 10 சதவீதமாகும்.
எனவே அந்நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் ஜவுளித் துறைக்கு அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் பலனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானுக்கு விதித்த அதே 19 சதவீத வரியை வங்கதேசத்துக்கு விதித்துள்ள அமெரிக்கா, இந்தியாவுக்கு 18 சதவீதம் வரி விதித்துள்ளது.
அமெரிக்காவின் பருத்தி மற்றும் செயற்கை இழை கொண்டு உற்பத்தி செய்யப்படும் வங்க தேச ஜவுளி மற்றும் ஆடைகளுக்கு வரிவிலக்கு அளித்துள்ள அமெரிக்கா, அதேசமயம் இந்திய ஜவுளி மற்றும் ஆடைகளுக்கு 18 சதவீத வரி விதித்துள்ளது.
அமெரிக்க விவசாய மற்றும் தொழில் துறை பொருட்களுக்கு இந்தியா அனுமதி அளிக்காத நிலையில் வங்கதேசம் நிபந்தனையற்ற அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
















