மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக சின்ன உடைப்பு கிராமத்தில் நிலம் கையப்படுத்தும் விவகாரம் தொடர்பாக அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்படுவதற்காக 633 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் விமான நிலையம் அருகே உள்ள சின்ன உடைப்பு கிராமத்தில் 18 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
1999ம் ஆண்டு கணக்கெடுக்கப்பின்படி 18 ஏக்கர் நிலத்தில் உள்ள 64 வீடுகளுக்கு இழப்பீடு அறிவித்து 2022ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
இத்தொகை தங்களுக்கு போதவில்லை என மக்கள், போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற வருகிறது.
இதற்கிடையில் நேற்று திமுக தேர்தல் அறிக்கை குழு மதுரை வந்ததை அறிந்த சின்ன உடைப்பு கிராம மக்கள், தேர்தல் அறிக்கை குழு தலைவரான கனிமொழியை சந்தித்து தங்களது கோரிக்கையை தெரிவிக்கச் சென்றனர்.
அப்போது அமைச்சர் மூர்த்தி 18 ஏக்கர் நிலத்தில் வசித்து வரும் 64 பேருக்கு மட்டும்தான் இழப்பீடு வழங்க முடியும் என்றும், மற்றவர்கள் பொய்யான அறிக்கை தருவதாகவும் கூறி அவர்களை கனிமொழியிடம் பேச விடாமல் தடுத்து நிறுத்தினார்.
அமைச்சரின் இந்த செயலை கண்டித்து சின்ன உடைப்பு கிராமத்தில் போராட்டம் நடைபெற்றது.
அப்போது அமைச்சர் மூர்த்தியின் உருவபொம்மையை கிராம மக்கள் எரிக்க முயன்ற நிலையில், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி, உருவ பொம்மையை எடுத்து சென்றனர்.
















