பட்ஜெட் விவாதத்தில் ராகுல் காந்தி உருப்படியான எந்தக் கருத்துகளையும் முன்வைக்கவில்லை என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
எதிக்கட்சிகளின் அமளி காரணமாக தொடர்ந்து முடங்கி வந்த நாடாளுமன்ற நடவடிக்கை, இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அப்போது பட்ஜெட் விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய பாஜக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக, இந்தியாவின் தரவுகளை மத்திய பாஜக அரசு அமெரிக்காவுக்கு விற்றுவிட்டதாக குற்றம்சாட்டினார். அதற்கு பதிலளித்த மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ராகுல் காந்தியின் இத்தகையை குற்றச்சாட்டுகள் பெரும் விளைவுகளை ஏற்படுத்த வேண்டும் என்பதால், அதனை நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. தொடர்ந்து, ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அவைக்குறிப்பில் ஏறாதென, அவைத் தலைவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
















