ராமேஸ்வரம் கோயிலுக்கு கங்கையிலிருந்து புனித நீர் சுமந்து வந்த பக்தர்கள் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
புகழ்பெற்ற ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
இந்நிலையில், 2000 கிலோமீட்டர் தூரத்தை கடந்து கங்கை நீரை சுமந்து வந்து அபிஷேகம் செய்த பக்தர்கள் மற்றவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளனர்.
மேற்கு வங்காளம் மாநிலம் கௌரா பகுதியைச் சேர்ந்த மலை டா, ருத்ரா பப்பு, கோலு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள், சுமார் 2000 கிலோமீட்டர் தூரத்தை நடந்து கடந்தும், சுமார் 80 கிலோ எடையுடைய கங்கை நீரை சுமந்தும் ராமேஸ்வரம் வந்தடைந்தனர்.
பின்னர் அவர்கள் ராமநாதசாமி திருக்கோவிலுக்குள் சென்று, கொண்டு வந்த கங்கை நீரால் ராமநாதசாமிக்கு அபிஷேகம் செய்தனர். இதன் மூலம் தாங்கள் எடுத்திருந்த நேர்த்திக்கடன் நிறைவேறியதாகவும், மனநிறைவும் ஆன்மீக மகிழ்ச்சியும் அடைந்ததாகவும் தெரிவித்தனர்.
2000 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து பக்தி உணர்வுடன் கங்கை நீரை கொண்டு வந்து அபிஷேகம் செய்த இவர்களின் செயல், அங்கு திரண்டிருந்த மற்ற பக்தர்களையும் மெய்சிலிர்க்க வைத்தது.
















