இந்திய வான்வெளியின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், விமானப்படைக்கு கூடுதலாக 114 ரஃபேல் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில், 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான மூன்றேகால் லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மெகா ஒப்பந்தத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இவற்றில் 18 விமானங்கள் நேரடியாக பிரான்ஸிடமிருந்தும், 96 விமானங்கள் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனம் ஹைதராபாத்தில் ஆலை அமைக்கும் என்றும், 2028-ஆம் ஆண்டு முதல், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாகங்கள் வெளிவரத் தொடங்கும் எனவும் தெரியவந்துள்ளது.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அடுத்த வாரம் இந்தியாவிற்கு வருகை தரவுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
















