கனடாவில் பள்ளிக்கூடம் ஒன்றில் 18 வயதேயான நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் பல அதிர்ச்சிகர தகவல்கள் தெரியவந்துள்ளன.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் Tumbler Ridge என்ற சிறிய நகரம் அமைந்துள்ளது. அங்கு Tumbler Ridge Secondary School என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது.
கடந்த 10ம் தேதி அப்பள்ளியில் வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்று வந்தன. அப்போது திடீரென மர்மநபர் ஒருவர் உள்ளே நுழைந்து துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினார். இந்த எதிர்பாராத தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் கனடா மட்டுமின்றி, உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கனடாவில் 7 நாட்களுக்கு தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என, அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி அறிவித்தார். இந்த துயர சம்பவத்திற்கு உலக நாடுகளும் தங்கள் வருத்தத்தையும், கண்டனத்தையும் பதிவு செய்தன.
மறுபுறம், பள்ளியில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து தீவிர விசாரணை முடுக்கி விடப்பட்டது. அதில் வெளியான தகவல்கள் தற்போது பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளன.
பள்ளியில் நுழைந்து தாக்குதல் நடத்தியவரின் பெயர், ஜெஸ்ஸி வான் ரூட்செலார் (Jesse Van Rootselaar). வெறும் 18 வயதேயான அவர், சம்பவம் நடைபெற்ற டம்ப்ளர் ரிட்ஜ் செகண்டரி பள்ளியின் முன்னாள் மாணவராவார். பிறக்கும்போது ஆணாக பிறந்த அவர், வளர்ந்ததும் தன்னை பெண்ணாக உணர தொடங்கினார். இதன் காரணமாக 6 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை பெண்ணாக அறிவித்துக் கொண்டார். தனது பெயரையும் மாற்றிக்கொண்ட அவர், ஹார்மோன் சிகிச்சைகளையும் எடுத்துக்கொண்டதாக தெரிகிறது.
அத்துடன் அவருக்கு பல ஆண்டுகளாகவே மனநலம் சார்ந்த பல பிரச்னைகள் இருந்து வந்துள்ளன. ஒருமுறை மனநலம் மிகவும் பாதிக்கப்பட்டு தனது அறையில் படுக்கையை தீவைத்து கொளுத்தியுள்ளார். ஜெஸ்ஸி வான் ரூட்செலாரின் இத்தகைய செயல்கள் காரணமாக, போலீசார் அவரது வீட்டிற்கு பலமுறை வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.
தொடக்கம் முதலே விசித்திரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஜெஸ்ஸி, துப்பாக்கிகளை வாங்கி தனது வீட்டில் வைத்துள்ளார். அவர் வைத்திருந்த ஆயுதங்களை ஏற்கனவே போலீசார் பறிமுதலும் செய்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் நடந்த பிப்ரவரி 10ம் தேதி, தனது வீட்டில் தாயுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த சமயத்தில் உறவினர்கள் சிலரும் அவரது வீட்டில் இருந்துள்ளனர். அப்போது திடீரென கோபம் தலைக்கேறிய அவர், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், தான் வைத்திருந்த துப்பாக்கியால் தனது தாயையும், 11 வயதான சகோதரனையும் சுட்டுத் தள்ளினார். இதில், சம்பவ இடத்திலேயே அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தப்பியோடிவிட்டனர்.
தாயையும், சகோதரனையும் கொன்றுவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய ஜெஸ்ஸி வான் ரூட்செலார், நேராக தான் பயின்ற Tumbler Ridge பள்ளிக்குச் சென்றார்.
அங்கு வகுப்பறைகளை நோக்கியும், நூலகத்திற்குள் நுழைந்தும் கண்ணில்பட்டவர்களை சுடத்தொடங்கினார். இதில், 12 வயதுடைய 3 சிறுமிகள், ஒரு சிறுவன் உட்பட 5 மாணவர்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் பெண் ஆசிரியை ஒருவரும் உயிரிழந்தார்.
இறுதியாக துப்பாக்கியால் தன்னைதானே சுட்டுக்கொண்டு ஜெஸ்ஸி தற்கொலை செய்து கொண்டார். இந்த தாக்குதலை அவர் ஏன் நடத்தினார் என்பதற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
2020ம் ஆண்டு கனடாவின் நோவா ஸ்கோடியாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் தீவைப்பு சம்பவத்தில் 23 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பிறகு நடந்த மிகவும் கொடூரமான தாக்குதல் சம்பவமாக Tumbler Ridge துப்பாக்கிச்சூடு அமைந்துள்ளது. மாணவர்களின் மனநலம், எளிதாக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கிடைப்பது உள்ளிட்டவை குறித்து, இந்த சம்பவம் விவாதத்தை கிளப்பியுள்ளது
















