ஒடிசாவில் உள்ள ஒரு ஒட்டுமொத்த கிராமமே இந்திய ஓவியக்கலைக்கும், கைவினை கலைக்கும் சான்றாக விளங்கி வருகிறது. அந்த கிராமம் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
பார்க்கும் இடமெல்லாம் ஓவியங்கள்…வீதிகள்தோறும் கைவினைப் பொருட்கள்…வீடுகள்தோறும் அழகிய அலங்காரங்கள்…
இதுதான், இந்தியாவின் பாரம்பரிய கைவினைக் கிராமமான ரகுராஜ்பூர்.
ஓடிசாவின் புரி நகரில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும், புவனேஸ்வரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள ரகுராஜ்பூரில் மொத்தமே 150 வீடுகள்தான் உள்ளன. ஆனால், அவை ஒவ்வொன்றிலுமே குறைந்தது 2 கைவினைக் கலைஞர்களும், ஓவியர்களும் இருக்கின்றனர்.
ரகுராஜ்பூர் கிராமத்தின் ஆன்மாவாக பட்டசித்ரா ஓவியங்கள் விளங்குகின்றன. ‘பட்டா’ என்றால் துணி. ‘சித்ரா’ என்றால் ஓவியம். பாரம்பரிய துணிகளில் இயற்கை வண்ணங்களை கொண்டு சித்திரங்களை வரைவதால், இந்த வகை ஓவியங்கள் பட்டசித்ரா என அழைக்கப்படுகின்றன.
புரி ஜெகன்நாதர் குறித்தும், இந்துப் புராணங்கள் பற்றியும், மகாபாரதம் ராமாயணம் போன்ற இதிகாசங்கள் குறித்தும் பட்டசித்ரா ஓவியங்கள் தீட்டப்படுகின்றன.

ஓவியங்களை தவிர்த்து, பாரம்பரிய முகமூடிகள், பனை ஓலை வேலைப்பாடுகள், காகிதக் கூழ் பொம்மைகள், மரச்சிற்பங்கள் உள்ளிட்டவைக்கும் ரகுராஜ்பூர் புகழ்பெற்று விளங்குகிறது. அத்துடன், புகழ்பெற்ற ஒடிசி நடனக் கலைஞரான கேளுச்சரண மகோபாத்திரா (Kelucharan Mohapatra) பிறந்த ஊர் என்ற பெருமையும் இக்கிராமத்திற்கு உண்டு.
வீடுகள்தோறும் ஓவியர்களும், கைவினைக் கலைஞர்களும் உள்ளதால், ஒட்டுமொத்த கிராமமே ஒரு கலைக்கூடம் போல காட்சியளிக்கிறது. இந்த கிராமத்திற்குள் நுழைந்தால், ஏதோ திறந்தவெளி அருங்காட்சியகத்திற்குள் நுழைந்துவிட்டோமோ என்ற எண்ணம் பலருக்கும் எழும்.
2000ம் ஆண்டு இந்திய கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான தேசிய அறக்கட்டளை, (INTACH) ரகுராஜ்பூரை இந்தியாவின் முதல் பாரம்பரியக் கிராமமாக அறிவித்தது. இதன் மூலம் இக்கிராமம் மேலும் பிரபலமடைந்தது. பட்டசித்ரா ஓவியங்களை வாங்குவதற்காவும், கலைஞர்கள் ஓவியம் வரைவதைத் நேரடியாகப் பார்க்கவும் சுற்றுலா பயணிகளும், கலை ஆர்வலர்களும் தொடர்ச்சியாக ரகுராஜ்பூருக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
















