தமிழகத்தில் உள்ள மீன்பிடி துறைமுகங்களை நவீனப்படுத்தவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு சுமார் ஆயிரத்து 658 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
மக்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் விரிவான பதிலைப் புள்ளிவிவரங்களுடன் தாக்கல் செய்துள்ளது.
அதன்படி, சாகர்மாலா திட்டத்தின்கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் மூக்கையூர் மீன்பிடித் துறைமுகத்திற்கு 113 கோடி ரூபாய், குந்துகால் மீன்பிடி இறங்கு தளத்திற்கு 74 கோடி ரூபாய் உட்பட 4 முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மீன்பிடித் தொழிலை நவீனமயமாக்க தேங்காய்ப்பட்டினம் துறைமுக விரிவாக்கத்திற்கு 253 கோடி ரூபாய், விழுப்புரம் மாவட்டம் அழகன்குப்பம் துறைமுகத்திற்கு 235 கோடி ரூபாய், சென்னை மீன்பிடித் துறைமுகத்தை நவீனமயமாக்க 97 கோடி ரூபாய் என 11 மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் 26 மீன்பிடி இறங்கு தளங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதேபோல், பாம்பன் சிறு துறைமுகத்தில் தூர்வாருதல் மற்றும் ராமேஸ்வரம் சிறு துறைமுகத்தில் பயணிகள் முனையம் அமைக்கும் திட்டங்களுக்கு சட்டரீதியான சுற்றுச்சூழல் அனுமதிகளை தமிழக அரசு இதுவரை வழங்கவில்லை என்றும், அதன் காரணமாகவே சாகர்மாலா திட்டத்தின்கீழ் இவற்றுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை எனவும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
















