அமெரிக்கா பொருளாதார தடைகளை நீக்கினால், அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்தைக்கு ஈரான் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளது
அணு ஆயுதம் தயாரிப்பதாக ஈரான் மீது அடக்குமுறையை கையாண்ட அமெரிக்கா, அணுசக்தி கட்டமைப்புகளை குண்டுகளை வீசி தகர்த்தெறிந்தது… முரண்டுபிடித்த ஈரானுக்கு மூக்கனாங்கயிறு கட்டும் விதமாக அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது.. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து, ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன, வலுத்தன… பல உயிர்களும் காவு வாங்கப்பட்டன…
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்தால், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். இதற்கு ஏற்றவகையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் ஈரான் நோக்கி விரைந்தன. இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் அசாதாரண சூழ்நிலையின் பிடியில் சிக்கியது… பனிப்போருக்கு நடுவே இருநாடுகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், ஈரானில் போராட்டங்களும் ஓயவில்லை…
இந்த நிலையில், தங்கள் நாட்டின் மீதான பொருளாதார தடைகளை நீக்கினால், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று கூறியிருக்கிறது ஈரான்… பிராந்திய பதற்றங்கள், ராணுவ அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், பொருளாதார தடைகள் மற்றும் நிவாரணத்தை பொறுத்து, அமெரிக்காவுடன் அணுசக்தி திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஈரான் விருப்பம் தெரிவித்துள்ளது. பிபிசி-க்கு அளித்த பேட்டியின்போது ஈரான் வெளியுறவு துணை அமைச்சர் மஜித் தக்த்-ரவஞ்சி இதனை உறுதிபடுத்தியுள்ளார். பந்து அமெரிக்காவின் நீதிமன்றத்தில் உள்ளது என்றும், அவர்கள் ஒப்பந்தம் செய்ய விரும்புவார்கள் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று அந்தப்பேட்டியில் ஈரான் வெளியுறவு துணை அமைச்சர் கூறியுள்ளார்.
பொருளாதாரத் தடைகள் நீக்கமும், நிவாரணமும் மேஜையில் இருந்தால், தெஹ்ரான் அதன் அணுசக்தித் திட்டத்தின் வரம்புகளைப் பற்றி விவாதிக்கத் தயாராக உள்ளது என்று ஈரான் உறுதிபடக்கூறியுள்ளது.
அண்மையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு ஒப்பந்தத்தை விரும்பினார் என்றும், ஆனால் ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை “செய்வது மிகவும் கடினம்” என்று கூறியிருந்தார். ஈரானின் அணுசக்தி ஆசைகளை கட்டுப்படுத்த ஒரு ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், டெஹ்ரான் மீது அமெரிக்கா நிச்சயம் தாக்குதல் நடத்தும் என்று எச்சரித்திருந்தார் டிரம்ப்… நீண்டகால பேச்சுவார்த்தைகளில் ஈரான் முன்னேற்றத்தை தாமதப்படுத்துவதாக அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து வாதிடும் நிலையில் ஈரானின் கருத்துக்கள் வெளிப்பட்டுள்ளன.
பிப்ரவரி மாத தொடக்கத்தில் அமெரிக்காவும், ஈரானும் ஓமனில் மறைமுக பேச்சுவார்த்தையை நடத்தின… இந்த சூழலில் ஜெனீவாவில் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதை ஈரான் வெளியுறவு துணை அமைச்சர் தக்த்-ரவஞ்சி உறுதிப்படுத்தியுள்ளார்.
நெகிழ்வுத்தன்மைக்கு சான்றாக, 60 சதவிகித செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை நீர்த்துப்போகச் செய்வதற்கான தனது வாய்ப்பை டெஹ்ரான் சுட்டிக்காட்டியுள்ளது. அந்த அளவில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஆயுத தரத்திற்கு அருகில் இருப்பதையும், இது அணு ஆயுத தயாரிப்பை நோக்கி நகரக்கூடும் என்ற சர்வதேச சந்தேகத்தை ஆழப்படுத்தியுள்ளதையும் காட்டுகிறது.
2015 அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் செய்தது போல், ஈரான் தனது 400 கிலோவிற்கும் அதிகமான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அனுப்புமா என்று கேட்டபோது, ”பேச்சுவார்த்தைகளின் போக்கில் என்ன நடக்கும் என்பது மிக விரைவில் தெரியவரும் என்று பதிலளித்தார்.
இஸ்ரேலியர்களாலும் அமெரிக்கர்களாலும் தாக்கப்பட்டபோது, ஏவுகணைகள் ஈரானை மீட்டன என்றும், எனவே தங்களது தற்காப்புத் திறன்களை இழப்பதை டெஹ்ரான் எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும் என்று தக்த்-ரவஞ்சி தெரிவித்தார்.
ஈரான் தன்னால் முடிந்ததைச் செய்யும், ஆனால் மறுபக்கம் அமெரிக்கா நேர்மையானவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் தக்த்-ரவஞ்சி குறிப்பிட்டுள்ளார்…
இஸ்ரேலின் அழுத்தம் மற்றும் எந்தவொரு ஒப்பந்தத்தின் நோக்கத்தையும் விரிவுபடுத்த ரூபியோ உள்ளிட்ட அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து அழைப்புகள் இருந்தபோதிலும், அதன் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டம் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக இருக்காது என்பதில் ஈரான் திட்டவட்டமாக உள்ளது. என பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படுமா என்பது விரைவில் தெரியவரும்…
















