காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மணிசங்கர் அய்யர், தான் ஒரு காந்தியவாதி, ராகுல்வாதி அல்ல என்று தெரிவித்திருப்பது, காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியின் தலைமைக்கு எதிராக ஒரு குழு உள்ளது என்பதை படம்பிடித்து காட்டுகிறது.
பொதுவாகவே வெளிப்படையான பேச்சுகளுக்கு பெயர் பெற்ற மணிசங்கர் அய்யர், சமீபத்தில் அளித்த பேட்டியில் ராகுல் காந்தியை மட்டும் அல்லாமல், காங்கிரசின் முக்கிய தலைவர்களையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
குறிப்பாக, தான் ஒரு காந்தியவாதி, நேருவாதி மற்றும் ராஜீவ்வாதி என குறிப்பிட்ட அவர், நான் ராகுல்வாதியல்ல என வெளிப்படையாக கூறியுள்ளார்.
மேலும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேராவை பொம்மை மற்றும் கிளி என்று விமர்சித்த அவர், ஜெய்ராம் ரமேஷ் தன்னை கட்சியை விட்டு நீக்கினால், அவருக்கு தக்க பாடம் புகட்டுவேன் என்றும் எச்சரித்துள்ளார்.
தொடர்ந்து, கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலை சர்தார் வல்லபாய் படேல் போன்ற தலைவர்களுடன் ஒப்பிடுவதே தவறு என்றும், அவர் ஒரு ரவுடி போன்றவர் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
மணிசங்கர் அய்யரின் இத்தகைய விமர்சனங்களுக்கு காங்கிரஸ் கட்சி தற்போது எதிர்வினையாற்றி வருகிறது.
















