திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடைபெற்ற மயான சூறை கொள்ளை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மாசி மாத அமாவாசையை ஒட்டி, வந்தவாசியில் உள்ள அங்காளம்மன் கோயிலில் மயான கொள்ளை விழா நடைபெற்றது.
இதில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி அங்காளம்மன் ஊர்வலமாக மயானத்திற்கு வந்தார்.
அப்போது பக்தர்கள் உடம்பில் எலுமிச்சை பழங்களை குத்தியும், தெய்வங்களின் வேடங்களை அணிந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இதில் வந்தவாசி மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்களும் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல் திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயிலில் மாசிமக அமாவாசையை ஒட்டி மயான கொள்ளை வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான விழா இன்று அதிகாலை நடைபெற்றது.
அப்போது அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன், ஊர்வலமாக ஈசானிய மயானத்திற்கு சென்றார். அப்போது பக்தர்கள் காளி, சிவன், பார்வதி, முருகன் போன்ற தெய்வங்களின் வேடங்களை அணிந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அங்காளம்மன் கோயிலிலும் மயான கொள்ளை விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் காளி வேடங்களை அணிந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் அங்குள்ள மயானத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜையும், வழிபாடும் செய்யப்பட்டது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயான கொள்ளை உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பக்தர்கள், காளி வேடமணிந்தபடி, மயானத்தை ஆக்ரோஷமாக சூறையாடி, நகரின் பல்வேறு வீதிகளில் நடனமாடியபடி வலம் வந்தனர். மேலும், சிறப்பு அலங்காரத்தில் பூத வாகனத்தில் அமர்ந்து வந்த அங்காளம்மனை, வழியெங்கும் பக்தர்கள் வழிபட்டனர்.
















