அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற தனது மாமாவையே நாய்களுக்கு உணவாக்கிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னில் குடும்பத்திற்கு மீண்டும் வாரிசுப் புயல் வீசியுள்ளது… பெற்ற மகளா அல்லது தங்கையா யார் அடுத்த அதிபர் என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது.. இது குறித்து ஒரு செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்..
அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடிக்கும் வடகொரியா, அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை என உலகையே மிரட்டி வருகிறது.. தங்களது நாட்டில் நடப்பதையெல்லாம் வெளியுலகம் அறியாத வகையில் ரகசியமாகவும் வைத்திருக்கிறது… கடுமையான கட்டுப்பாடுகள், கொடூரமான தண்டனைகள் என தனிப்பாதையில் செல்கிறது வடகொரியா…
அங்கு சர்வாதிகார ஆட்சி நடப்பது சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை.. அது உலகறிந்த விஷயம்தான்…கொரிய போருக்குப் பின்னர் கொரிய தீபகற்பம் இரண்டாக உடைந்தது.. அப்போதிருந்தே வடகொரியாவை கிம்ஜாங் உன் குடும்பத்தினரே ஆண்டு வருகின்றனர்.. கிட்டத்தட்ட மன்னர் ஆட்சி போன்றுதான் அங்கு நிலைமை.. கடந்த 2011ம் ஆண்டு தந்தையின் மறைவுக்கு பின்னர் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவர்தான் வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன்…
கிம் ஜாங் உன்னுக்கு பின்னர் அவரது சகோதரியான கிம் யோ ஜாங்-தான் ஆட்சி அதிகாரத்திற்கு வருவார் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.. ஆனால் வடகொரிய அதிபரின் எண்ணம் வேறாக உள்ளது.. அடுத்த அதிபர் யார் என்ற வலுவான கேள்விக்கு மத்தியில், தனது மகள் கிம் ஜுஏ-வை முன்னிலைப்படுத்தி வருகிறார் கிம் ஜாங் உன்.. கிம் வம்சத்திற்குள் மீண்டும் வாரிசு புயல் வீசத்தொடங்கியிருப்பது உலகளவில் கவனம் பெற்றுள்ளது.
எனினும் வடகொரியாவில் வாரிசு அரசியல் என்பது அவ்வளவு சுலபமானது அல்ல… மன்னராட்சி போன்ற நிலையே அங்கு நிலவுகிறது..
கடந்த 2013ம் ஆண்டு வடகொரியாவில் மிகவும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நடந்தன.. தற்போதைய அதிபரான கிம் ஜாங் உன்னின் மாமாவான ஜாங் சாங்- தேக், கடந்த 2013ம் ஆண்டு தேசத் துரோக குற்றச்சாட்டில் தூக்கிலிடப்பட்டார். நீண்ட காலமாக நாட்டின் 2வது நபராகவும், கிம் ஜாங் உன்னிற்கு அதிகாரம் கைமாறியபோது முக்கிய வழிகாட்டியாகவும் இருந்தவர்தான் ஜாங் சாங்-தேக்…
இவ்வளவு செல்வாக்காக இருந்த ஜாங் சாங்- தேக், தொழிலாளர் கட்சிக் கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும், ராணுவ தீர்ப்பாயத்தால் விசாரிக்கப்பட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் பளிச்சிட்டன… ஊழல், சூதாட்டம், போதைப்பொருள் பயன்பாடு போன்ற பகிரங்கமான குற்றச்சாட்டுகள் வேறு…
ஆட்சியை கவிழ்க்க சதி என்ற குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதால், ஜாங் சாங்-தேக் உடனடியாக தூக்கிலிடப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வமான செய்தி நிறுவனமான KCNA பிரேக்கிங் செய்தியை வெளியிட்டது. அவர் வெறுக்கத்தக்க மனித குப்பை.. நாயைவிட மோசமானவர், தேசத் துரோகி என்ற வெறுப்பு பிரசாரமும் பரப்பப்பட்டன… அது மட்டுமின்றி கிம் ஜாங் உன் தனது மாமாவை நிர்வாணப்படுத்தி வெறிபிடித்த நாய்களுக்கு உணவாக்கியதாகவும் உறுதிபடுத்தப்படாத செய்திகள் பரவின..
ஜாங் சாங்-தேக்கின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், பதற்றம் தொற்றிக்கொண்டதால், அவசர பாதுகாப்பு கூட்டத்தை கூட்டியது தென்கொரியா, வடகொரியாவில் அசாதாரண ராணுவ நகர்வுகள் எதுவும் இல்லை என்றாலும், அமெரிக்கா வெளியிட்ட அறிக்கைகளை சந்தேகிக்க எந்தக் காரணமும் இல்லை என்றும் கூறியது..
ஜாங் சாங்-தேக்கின் மரணம் வடகொரியாவின் மிருகத்தனமான ஆட்சிக்கு மற்றொரு எடுத்துக்காட்டு என தென்கொரியாவால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. வடகொரியாவின் முதல் நட்பு நாடான சீனா, இந்த விவகாரத்தை உள்நாட்டு விவகாரம் என்று விவரித்தாலும், பொருளாதார உறவுகளை வளர்ப்பதில் ஜாங் சாங்கின் பங்கை கருதி கவலைப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறினர்.
தற்போது, கிம் ஜாங் உன் தனது மகளை எதிர்காலத் தலைமைக்கு நிலைநிறுத்தக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பியோங்யாங்கில் மிகவும் சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராக நீண்ட காலமாகக் கருதப்படும் அவரது சகோதரி கிம் யோ ஜாங் மீதும் கவனம் திரும்பியுள்ளது. இதனால் பெற்ற மகளா, சகோதரியா யாரை அடுத்த அதிபராக்க போகிறார் கிம் ஜாங் உன் என்ற எதிர்பார்ப்பும், அதற்கான எதிர்வினைகளும் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.
















