மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் பதிவை பட்டியலில் இருந்து நீக்கம் செய்த தேர்தல் ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தேர்தல் ஆணையம் நடத்திய தேர்தல்களில் தொடர்ந்து 6 ஆண்டுகள் போட்டியிடாமல் இருந்தது உள்ளிட்ட தேர்தல் விதிகளை மீறியதாக நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட 474 கட்சிகளின் பதிவை பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் அண்மையில் நீக்கியது.
தமிழகத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 42 கட்சிகளின் பதிவுகள் நீக்கப்பட்டன.
தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி மனிதநேய மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தலைமை நீதிபதி எம்.எம் ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தேர்தல் ஆணையம், பதிவு பட்டியலிலிருந்து நீக்கிய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறியதுடன், இந்த வழக்கு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 2-வது வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
















