திமுக தற்போது முதலமைச்சர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் சபரீசன் கையில் உள்ளதாகவும் திமுகவிலிருந்து விலகிய எஸ்.ஆர்.கோபி தெரிவித்துள்ளார்.
மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளரும், மதுரையில் திமுகவின் முக்கிய நிர்வாகியுமான எஸ்.ஆர். கோபி சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் அவரை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 25 ஆண்டுகள் திமுகவிற்காக உழைத்தும் தகுதி இல்லாதவர்களுக்குப் பதவிகள் வழங்கப்படுவதாகவும், திமுக தற்போது முதலமைச்சர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இல்லை, சபரீசன் மற்றும் அவரது தரப்பினரின் கைகளில்தான் உள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.
மேலும், எல்லோரையும் போல தானும் பதவியை எதிர்பார்த்தது உண்மைதான் என்றும், உழைப்பிற்கு மதிப்பில்லை என்பதால் விலகியதாகவும் வெளிப்படையாகத் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, எஸ்.ஆர். கோபியை போன்றவர்கள் திமுகவில் மதிக்கப்படுவதில்லை என்றும் மதுரை எப்போதும் அதிமுகவின் கோட்டைதான் என்றும் குறிப்பிட்டார்.
















