ஆரோவில்- இந்தியக் கல்வி முறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மத்திய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஆரோவில் நிர்வாகத்தினர் இடையே ஒரு உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது.
ஸ்ரீ அரவிந்தரின் ‘ஒருங்கிணைந்த கல்வி’ தத்துவத்தை நாட்டின் முதன்மைக் கல்வித் திட்டத்தில் இணைப்பதை நோக்கமாகக் கொண்டு , மத்திய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) மற்றும் ஆரோவில் நிர்வாகத்தினர் இடையே ஒரு உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில், NCERT-இன் ஆசிரியர் கல்வித் துறைப் பேராசிரியர் டாக்டர் சுஷில் குமார் திவாரி மற்றும் SAIIER நிர்வாகி ஆரவென் ஆகியோர் பங்கேற்றனர். மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறையிலிருந்து மாறி, மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை மையமாகக் கொண்ட கல்வி முறையை உருவாக்குவது குறித்து அவர்கள் ஆலோசித்தனர்.
இந்த ஆலோசனைகளின் உச்சகட்டமாக, ஆரோவில் அறக்கட்டளையின் செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான டாக்டர் ஜெயந்தி எஸ். ரவி I.A.S. தலைமையில் ஒரு சந்திப்பு நடைபெற்றது.
இதில் டாக்டர் சுஷில் குமார் திவாரி, ஆரவென் மற்றும் NCERT-இன் புதுமையான சிறப்புத் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆசிரியர்களே இத்தகைய புதிய கல்வி முறைகளை சாதாரண வகுப்பறைகளுக்கும் கொண்டு செல்லும் ‘மாற்றத்தின் தூதர்களாக’ இருப்பார்கள் என்று டாக்டர் ரவி குறிப்பிட்டார்.
















