தாம்பரம் கோவிலாஞ்சேரி பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் முழுமையாக அகற்றப்படாத நிலையில், அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவிலாஞ்சேரி ராகேஷ் நகர் பகுதியில், நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் சதீஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், நீர்நிலைகளை பாதுகாக்கும் நோக்கில், குளம் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது.
இதையடுத்து, சாலையோரம் உள்ள ஒன்பது வீடுகள் அகற்றப்பட்ட நிலையில், முழுமையான ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால், இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றாதது குறித்து கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், செங்கல்பட்டு ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர்.
















