ஏ.ஐ. உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி முன்வைத்த மனிதநேய அடிப்படையிலான கொள்கைகளை ஏற்று கொண்டுவரப்பட்ட பிரகடனத்தில், அமெரிக்கா, சீனா, ஜெர்மனி உள்ளிட்ட 86 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
டெல்லி பாரத் மண்டபத்தில் 5 நாட்கள் நடைபெற்ற ஏ.ஐ. உச்சி மாநாடு மற்றும் கண்காட்சியில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றினார். மாநாட்டில் அனைவருக்கும் நலம், அனைவருக்கும் மகிழ்ச்சி என்று பிரதமர் மோடி கொண்டுவந்த கொள்கையை உலக நாடுகள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான ஏ.ஐ. தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் தர உலக நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், ஏ.ஐ.யின் பலன்கள், மனித குலத்துக்கு சமமாக கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்ட பிரகடனத்தில், அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ரஷியா, பிரான்ஸ் உள்ளிட்ட 86 நாடுகள், இரண்டு சர்வதேச அமைப்புகள் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரமாண்டமாக நடந்த மாநாட்டின் மூலம் உள்கட்டமைப்பு துறையில் மட்டும் 22.50 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் குவிந்துள்ளதாகவும், புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் அதிநவீன டீப்டெக் ஆராய்ச்சிக்காக 1.80 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் செய்ய சர்வதேச நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
ஏ.ஐ. கண்காட்சியில் 5 லட்சம் பார்வையாளர்கள் பங்கேற்ற நிலையில், அவர்கள் சர்வதேச நாடுகளில் இருந்து வந்திருந்த வல்லுநர்களிடம் கலந்துரையாடி ஏ.ஐ. தொழில்நுட்பம் சார்ந்த அறிவை வளர்த்துக் கொண்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
















