திமுகவின் பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்து ஏமாற மாட்டார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை அம்பத்தூர் மற்றும் ஆவடி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், போதைப்பொருள் விற்பனையை தடுக்க தவறிய முதலமைச்சர் ஸ்டாலினால், தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாக விமர்சித்தார்.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் மருமகன் சபரீசனும் மகன் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதியும் 30,000 கோடி ஊழல் செய்து வைத்திருந்ததாக ஆடியோ வெளியானதை அவர் சுட்டிக்காட்டினார்.
அப்போதே முப்பதாயிரம் கோடி ரூபாய் ஊழல் என்றால் தற்போது எத்தனை ஆயிரம் கோடி ரூபாயை கொள்ளையடித்து வைத்திருப்பார்கள் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தலாக 2026 சட்டமன்ற தேர்தல் இருக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேரன் மற்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மகன் என்ற தகுதியை மட்டுமே வைத்துக்கொண்டு உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
அதிமுகவின் அறிவிப்புகளை பார்த்து அச்சத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை தற்போது வெளியிட்டு வருவதாகவும், ஆனால் திமுகவின் பொய் வாக்குறுதிகளை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.
















