ஜப்பானில் புறக்கணிப்பட்ட நிலையில் இருந்த ‘பஞ்ச்-குன்’ என்ற ஏழு மாதக் குட்டி குரங்கை, அதன் கூட்டத்தினர் அள்ளி அணைத்து ஏற்றுக்கொண்ட வீடியோ வைரலாகியுள்ளது.
மகாக் குரங்கினத்தைச் சேர்ந்த தாயால் கைவிடப்பட்ட குட்டிக் குரங்கான பஞ்ச்-குன், இச்சிகாவா நகர உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகிறது. தனிமையில் தவித்த பஞ்ச்-குன், ஆரம்பத்தில் மற்ற குரங்குகளுடன் பழக முயன்றபோது, அவை அதனை புறக்கணித்து தாக்கியதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் பூங்கா பராமரிப்பாளர்கள் கொடுத்த உராங்குட்டான் பொம்மையை அணைத்தபடியே இருந்த பஞ்ச்-குன் குரங்கின் வீடியோக்கள் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தன.
இந்த சூழலில் இச்சிகாவா பூங்கா நிர்வாகம் வெளியிட்ட புதிய வீடியோவில், பெரிய குரங்கு ஒன்று பஞ்ச்-குன்னை தன்னிடம் இழுத்து அணைத்துக்கொள்ள, மற்றொரு குரங்கு அதனை சுத்தம் செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது. குரங்குகளின் வாழ்வில் இத்தகைய நடத்தைகள், நம்பிக்கை மற்றும் சமூக உறவை உருவாக்கும் முக்கிய அறிகுறியாக கருதப்படுகிறது. முன்பு பலமுறை தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட பஞ்ச்-குன், தற்போது தனது கூட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களுடன் ஒன்றிணைந்து வாழ்ந்து வருவதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
















