தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட, GKM தமிழ்குமரன் மொத்தம் 788 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின், தற்போதைய பொறுப்பாளர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது.
இதன் காரணமாக 2026- 29ஆம் ஆண்டுகளுக்கான தேர்தல் சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இதில், மொத்தம் 33 பதவிகளுக்கு 100 பேர் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில், திரையுலகைச் சேர்ந்த பல முன்னணித் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் வாக்களித்தப் பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தயாரிப்பாளர்களுக்கு நிறைய பிரச்னைகள் இருப்பது எல்லோருக்கும் தெரியும் எனவும் வெற்றி பெறும் அணி தயாரிப்பாளர்களின் முக்கியமான பிரச்னைகளை தீர்த்து வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மாலை 6 மணியளவில் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இரவு 8.30 மணியளவில் முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி, பதிவான 1170 வாக்குகளில், 788 வாக்குகள் பெற்ற GKM தமிழ்குமரன், தலைவர் பதவிக்கு தேர்வானார்.
















