தனிச் சின்னத்தில் தான் போட்டி என்பதில் மதிமுக உறுதியாக இருக்கும் நிலையில், மாநிலங்களவை சீட் குறித்தும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக மதிமுக அவைத் தலைவர் அர்ஜூனராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு குறித்த முக்கியப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. திமுகவின் பேச்சுவார்த்தைக் குழுவுடன், மதிமுக அவைத் தலைவர் அர்ஜுனராஜ் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜூனராஜ் , திமுக உடனான சந்திப்பு மிகவும் சுமுகமாக முடிந்ததாகவும், தேர்தலின் போது மதிமுக தனது சொந்த சின்னத்தில்தான் போட்டியிடும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து மாநிலங்களவை சீட் குறித்து திமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், தற்போது தொகுதிப் பட்டியல் எதுவும் வழங்கப்படவில்லை என்றும்,ஓரிரு நாட்களில் மீண்டும் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
















