தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானதாக வெளியான செய்திகளை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது.
இந்திய விமானப்படையில் இடம்பெற்றுள்ள உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் ரக விமானம், கடந்த பிப்ரவரி 7-ம் தேதி வானிலிருந்து கீழே விழுந்து விபத்தில் சிக்கி சிதைந்ததாக செய்திகள் வெளியாகின. சமீப காலங்களில் தேஜஸ் விமானத்திற்கு ஏற்பட்ட மூன்றாவது பெரிய விபத்து இது என கூறப்பட்டது.
இந்த விவகாரம் இணையத்தில் பேசுபொருளான நிலையில், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிக்கையில், இது வானில் நடந்த விபத்து அல்ல எனவும், தரையில் ஏற்பட்ட ஒரு சிறிய தொழில்நுட்பச் சிக்கல் எனவும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல்ஸ் நிறுவனம் விளக்கமளித்தது.
மேலும், இந்த தொழில்நுட்ப கோளாறு குறித்து இந்திய விமானப்படையுடன் இணைந்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில், இந்திய விமானப்படைக்கு கூடுதலாக 97 தேஜாஸ் எம்கே-1ஏ இலகுரக போர் விமானங்களை வாங்க, எச்ஏஎல் நிறுவனத்துடன் 62,370 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை பாதுகாப்பு அமைச்சகம் இறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.
















