மக்களின் அன்றாட குடும்பச் சுமை பன்மடங்கு அதிகரித்துவிட்டதாகவும், அவர்களின் சுமையை குறைக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் உதவித் தொகையாக பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 3 ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். அதன்படி வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் இரண்டாயிரம் ரூபாயும், 12ஆம் வகுப்பு வரை படித்து வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாயும், உதவித் தொகையாக வழங்கப்படும் என தெரிவித்தார்.
மீன்பிடி தடைக் காலங்களில் மீனவர்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும் நிவாரணத் தொகை எட்டாயிரம் ரூபாயில் இருந்து பனிரெண்டாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் அன்று வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாகவும், விசைத்தறி நெசவாளர்களுக்கு ஆயிரம் யூனிட்டில் இருந்து ஆயிரத்து 400 யூனிட்டாகவும் உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
நகரப் பகுதிகளில் நடைபாதை ஓரமாக கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் உதவித்தொகையாக பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
















