சோமாலியாவில் 6.5 மில்லியன் மக்கள் உணவு கிடைக்காமல் தவித்து வரும் நிலையில், நிதி நெருக்கடியால் அந்நாடு கடுமையான உணவுப் பற்றாக்குறை எதிர்கொண்டு வருவதாக ஐ.நா. சபை எச்சரித்துள்ளது.
சோமாலியாவில் வறட்சி அவசரநிலை மிகவும் அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. கடும் வறட்சி, உள்நாட்டுப் போர் மற்றும் சர்வதேச நாடுகளின் நிதியுதவி குறைப்பு ஆகியவற்றால் சுமார் 6.5 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா சபையும் சோமாலிய அரசாங்கமும் கூட்டாக எச்சரித்துள்ளன.
கடந்த ஆண்டு 3.4 மில்லியனாக இருந்த பட்டினியால் வாடுவோரின் எண்ணிக்கை, இந்த ஆண்டு 6.5 மில்லியனாக உயர்ந்துள்ளது.
இது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம். சுமார் 1.84 மில்லியன் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சுமார் 5 லட்சம் குழந்தைகளின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. சர்வதேச சமூகம் மற்றும் உதவி நிறுவனங்கள் உடனடியாக நிதி வழங்காவிட்டால், ஆயிரக்கணக்கான மக்கள் பட்டினியால் உயிரிழக்கும் சூழல் ஏற்படும் என்று சோமாலியாவிற்கான ஐநா ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் கான்வே தெரிவித்துள்ளார்.
















