நக்சலைட்டுகளின் கோட்டையாக கருதப்பட்ட சுக்மா மாவட்டத்தின் சிந்தாகுஃபா கிராமத்தில் பாதுகாப்பு படையினரின் வருகைக்கு பிறகு அங்கு ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.
சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டம், பல ஆண்டுகளாக நக்சலைட்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியாகும். இதனால், சாலை, மின்சாரம், மருத்துவம், கல்வி போன்ற எந்த அடிப்படை வசதியும் கிடைக்காமல் இருந்தது. நக்சல்களுக்கு பயந்து அரசு அதிகாரிகளும் செல்ல மறுத்ததால் கிராம மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வந்தனர்.
தற்போது நக்சலைட்கள் ஒழிக்கப்பட்ட நிலையில், அங்கு பாதுகாப்பு படையினரின் முயற்சியின்கீழ் வளர்ச்சிப்பணி சாத்தியமாகி உள்ளது.
அடர்ந்த காடுகள், சவாலான நிலப்பரப்புகளுக்கு இடையே, சிஆர்பிஎஃப் படையினர் உதவியுடன் மின் கம்பங்கள் மற்றும் மின் இணைப்புகள் அமைக்கப்பட்டன. நக்சலைட்களின் நினைவிடங்களும் அகற்றப்பட்டு மின்வசதி மூலம் கிராமத்தில் கல்வி, மருத்துவம் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் மேம்படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளதாக ஊர் மக்கள் கூறுகின்றனர்.
ஆரம்பத்தில் அச்சத்தில் இருந்த மக்கள், தற்போது சிஆர்பிஎஃப் வீரர்களிடம் தயக்கமின்றி உதவி கேட்கின்றனர். நக்ஸலைட்களின் அச்சுறுத்தலைத் தாண்டி, அரசு அமைப்புகளின் மீதான நம்பிக்கை இங்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
















